விமானப்படைக்கு ரூ.2,236 கோடியில் தகவல் தொடர்பு தளவாடங்கள்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

விமானப்படைக்கு ரூ.2,236 கோடியில் தகவல் தொடர்பு தளவாடங்கள் வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு ரூ.2,236 கோடியில் தகவல் தொழில்நுட்ப தளவாடங்கள் வாங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் முக்கியமாக ஜிசாட்-7சி செயற்கைக்கோள் மற்றும் சாப்ட்வேர் மூலம் வரையறுக்கப்பட்ட ரேடியோக்களின் நிகழ்நேர இணைப்புக்கான தரை மையங்கள் அடங்கியுள்ளன.

விமானப்படையின் இந்த திட்டத்துக்கு ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இந்த ஒப்புதலை வழங்கியது. இந்த தளவாடங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வாங்கப்படும். அந்தவகையில் ஜிசாட்-7சி செயற்கைக்கோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படும்.

ஜிசாட்-7சி செயற்கைக்கோள் மற்றும் சாப்ட்வேர் மூலம் வரையறுக்கப்பட்ட ரேடியோக்களின் நிகழ்நேர இணைப்புக்கான தரை மையங்களை பெறுவதன் மூலம் அனைத்து சூழ்நிலைகளிலும் நமது பாதுகாப்பு படையினரின் தகவல் தொடர்பு சேவை மேம்படும் என ராணுவ அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல ரூ.5 ஆயிரம் கோடியில் 7.5 லட்சம் ஏ.கே.203 நவன துப்பாக்கிகள் தயாரிக்கவும் ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com