

புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பிரதமர் மோடி நேற்று டெல்லி எஸ்.ஆர்.சி.சி. பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். நாட்டின் இளைஞர்கள், கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து உரையாடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அந்த உரை மற்றொரு அரசியல் பிரசாரமாக மாறிவிட்டது.
ஜனநாயகத்தில், கேள்விகளை ஒடுக்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு புதிய அடைமொழியை சூட்டுவதுதான் பிரதமர் மோடியின் பாணி. இதன் மூலம் மோடி அரசின் தோல்விகள் மறைக்கப்படுகின்றன.
கோபக்கார மாமா (Angry Uncle), புத்திசாலி நக்சல் (Brainy Naxal), நகர்ப்புற நக்சல் (Urban Naxal), கான் மார்க்கெட் கும்பல் (Khan Market Gang), போராட்டக்காரர் (Agitation-jeevi), ஒட்டுண்ணி (Parasite) என பல்வேறு அடைமொழிகள் மாறலாம். ஆனால் மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மாறுவதே இல்லை.
பிரதமர் மக்களை அணுக முடியாத நிலைக்குச் (Out of Reach) செல்லும்போதுதான், மக்களை சென்றடையும் முயற்சிகள் (Outreach) அவருக்கு தேவைப்படுகின்றன. பிரதமர் தனது செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்தார். நாட்டின் இளைஞர்களும் தங்கள் அறிக்கையுடன் தயாராக நிற்கிறார்கள்.
அவர்களது அறிக்கையில் இருப்பது வேலையின்மை, பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் அரசுப் பணி நியமனங்கள், வினாத்தாள் கசிவு, நாளுக்கு நாள் விலை உயர்ந்துகொண்டே செல்லும் கல்வி செலவு, குறைந்து வரும் கல்வி உதவித்தொகை மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையின் மீது அதிகரித்து வரும் அழுத்தம் ஆகியவை ஆகும். மாணவர்களின் குரலைக் கேளுங்கள்; நேரடி பதிலைத் தவிர்த்துவிட்டு சுற்றி வளைத்துப் பேசுவதால் தீர்வுகள் கிடைக்காது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.