

புதுடெல்லி,
ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மோடி அரசு தலையிடுகிறது என குற்றம் சாட்டிய சீத்தாராம் யெச்சூரி, பெருநிறுவனங்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். மோடி அரசு ஏற்கனவே கார்பரேட் நிறுவனங்களின் ரூ.3 லட்சம் கோடிக்கு மேலான வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இப்போது அவர்களுக்கு கூடுதல் கடனை கொடுக்க நெருக்கடி கொடுக்கிறது. இது பொதுமக்களின் நலனுக்கு மாறானது. இது பொதுமக்களின் பணத்தை திருப்பி அளிக்காத பணக்கார நண்பர்களுக்குதான் பயனளிக்கும் என்று டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 7-ஐ பயன்படுத்துவது தொடர்பாக அரசுக்கும் ஆர்.பி.ஐக்கும் இடையே மோதலான போக்கு நிலவும் நிலையில் இத்தகையை குற்றச்சாட்டை சீத்தாராம் யெச்சூரி முன்வைத்துள்ளார். இந்த பிரிவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. இதற்கு முன்னதாக இப்பிரிவு பயன்படுத்தப்பட்டது கிடையாது. ஆர்.பி.ஐ. விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.