பள்ளி நண்பரின் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தந்த பிரதமர் மோடி

இரு தரப்பினர் இடையே சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, 15 ஆண்டுகளாக நீடித்து வந்த சொத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
பள்ளி நண்பரின் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தந்த பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியை, அவரது பள்ளி நண்பர் சந்தித்து பேசிய நிலையில், அவரிடம் இருந்து அபகரித்த நிலத்தை பாஜக எம்.எல்.ஏ. திரும்ப ஒப்படைத்தார்.

பிரதமரின் பள்ளி நண்பர்

குஜராத்தின் வாத்நகரில் உள்ள பி.என்.உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் ஒன்றாக படித்தவர் அஸ்கர் அலி வோரா. இவர், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மிரா ரோடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். கடந்த 1989-ல், மும்பையின் பயந்தர் கிழக்கு நவகர் பகுதியில், 2,810 சதுர மீட்டர் (சுமார் 30 ஆயிரம் சதுர அடி) நிலத்தை அஸ்கர் அலி வாங்கினார்.

போலி ஆவணங்கள்

இந்த நிலத்தை யாருக்கும் அவர் விற்காத நிலையில், 2011-ல் போலி ஆவணங்கள் வாயிலாக, 'சுவயம் பில்டர்ஸ்' நிறுவனம் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவின், 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனம் அந்த நிலத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தன் நிலத்தை மீட்க 15 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டும் அஸ்கர் அலிக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

பிரதமருடன் சந்திப்பு

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நிலத்தில் பயந்தர் மாநகராட்சி நகரத் திட்டமிடல் துறை கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் பள்ளி நண்பரான பிரதமர் மோடியை டெல்லியில், அஸ்கர் அலி கடந்த 8-ம்தேதி சந்தித்து பேசினார். அப்போது, தன் சொத்து பிரச்சினை குறித்து அவரிடம் முறையிட்டார்.

இந்த விவகாரத்தில் நகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அவர் குற்றஞ்சாட்டினார். போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவும் அஸ்கர் அலி, பிரதமரிடம் கோரினார்.

சிறப்பு கூட்டம்

இதையடுத்து, மராட்டிய மாநிலத்தின் உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டனர். பாஜகவைச் சேர்ந்த மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிசின் முதன்மைச் செயலர் ஸ்ரீகர் பர்தேசி தலைமையில் மும்பை மந்திராலயாவில் நேற்று முன்தினம் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில், அஸ்கர் அலி, எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி கமிஷனர் ராதா பினோத் சர்மா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுமுக முடிவு

இந்த கூட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான உரிமையை கைவிடுவதாகவும், அங்கே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள பெற்ற அனுமதியை திருப்பித் தருவதாகவும் நரேந்திர மேத்தா அதிகாரபூர்வ கடிதத்தை சமர்ப்பித்தார். போலீசாருக்கு வழங்கிய கடிதத்தில், அஸ்கர் அலி மீதான புகாரை திரும்பப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பினர் இடையே சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, 15 ஆண்டுகளாக நீடித்து வந்த சொத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com