

சண்டிகார்,
பிரதமர் மோடி அரியானாவில் 3 சுகாதார திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் தேசிய புற்றுநோய் மையம் திறப்பு விழா ஆகியவற்றில் இன்று கலந்து கொண்டார்.
உலகிலேயே முதன் முறையாக குருக்ஷேத்திராவில் அமையவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஆயுஷ் பல்கலை கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த பல்கலை கழகம் ரூ.475 கோடி மதிப்பில் 94.5 ஏக்கரில் கட்டி முடிக்கப்படும். இதன்பின் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவத்திற்கான கல்வி மற்றும் சிகிச்சை வசதி இங்கு வழங்கப்படும்.
இதேபோன்று கர்னால் பகுதியில் அமையவுள்ள சுகாதார அறிவியலுக்கான பண்டிட் தீன் தயாள் உபாத்யாய பல்கலை கழகம் மற்றும் பஞ்சகுலாவில் அமையவுள்ள தேசிய ஆயுர்வேத மையம் ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.
பிரதமர் மோடி குருக்ஷேத்திராவின் ஜஜ்ஜார் நகரில் பாத்சா கிராமத்தில் ரூ.2,035 கோடி மதிப்பிலான தேசிய புற்றுநோய் மையம் ஒன்றையும் இன்று தொடங்கி வைத்துள்ளார். இங்கு அனைத்து நிலை புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக 710 படுக்கைகள் உள்ளன.
இங்கு மருத்துவர்களின் அறைகளுடன், நோயாளிகளுக்காக 800 அறைகள் வரை கட்டப்பட்டு உள்ளன.