

புதுடெல்லி,
சட்டீஸ்காரில் கடந்த ஜனவரி 21ந்தேதி மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடந்து வந்த வீடு கட்டும் பணியில் 12 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் ஈடுபட்டு இருந்துள்ளனர். அங்கு வந்த அர்ஜூன் யாதவ் என்ற வாலிபர் சிறுமியை பாலியல் வன்முறை செய்து விட்டு தப்பியோடி விட்டான்.
இந்த சம்பவத்திற்கு மறுநாள் சிறுமியின் சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டம் நடத்தியுள்ளனர். அங்கு குற்றவாளி அர்ஜூன் கொண்டு வரப்பட்டு உள்ளான். குற்றவாளி என பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட அந்த வாலிபர் அபராத தொகை செலுத்தி விட்டு சென்று விட்டான்.
அதன்பின்னர் பிப்ரவரி 4ந்தேதி மற்றொரு பஞ்சாயத்து கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிறுமியை குளிக்க வைத்து, மொட்டை அடித்துள்ளனர். அந்த சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இறைச்சி மற்றும் மதுபானம் உள்ளிட்ட பெரிய விருந்து வைக்க குடும்பத்தினருக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டது. சிறுமி புனிதம் அடைவதற்கான நடைமுறை இது என கிராம தலைவர் கூறியுள்ளார்.
இதுபற்றிய தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். பஞ்சாயத்து நடத்திய கிராமத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.