15 வினாடிகளில் பணப்பரிவர்த்தனை: யுபிஐ அதிவேக சேவை அறிமுகம்

செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிவேகமாக நடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
15 வினாடிகளில் பணப்பரிவர்த்தனை: யுபிஐ அதிவேக சேவை அறிமுகம்
Published on

புதுடெல்லி,

யுபிஐ அதிவேக சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதால் எந்த பணப்பரிவர்த்தனையும் 15 விநாடிகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை நேற்று முதல் என்பிசிஐ அதிவேகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிவேகமாக நடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது பணப் பரிமாற்றம், நிலை சரிபார்ப்புகள், பணம் உரிய கணக்கிற்கு மாற்றுதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் 30 விநாடிகளில் நடந்தது. இனிமேல் 10 முதல் 15 வினாடிகளில் முடிக்கப்படும். நேற்று முதல் இந்த அதிவேக சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் பணம் பெறுபவரின் பெயர் விவரத்தை காண்பிக்க 15 வினாடிகள் ஆனது. இனிமேல் 10 வினாடிகள் மட்டுமே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் விரைவில் தங்கள் யுபிஐ பயன்பாடுகள் மூலம் ஒரு நாளைக்கு 50 முறை தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். தற்போது, ஒரு நாளைக்கு கணக்கு இருப்பைச் சரிபார்க்க வரம்பு இல்லை. இனிமேல் அதை 50 முறையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் எண்ணிக்கை 1,868 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரூ.25.14 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. சரியான பயனாளிக்கு பணம் அனுப்புகிறோம் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், ஆபத்தைத் தவிர்க்கவும், பரிவர்த்தனைகளுக்கு இறுதி பயனாளியின் பெயரை மட்டுமே காட்ட வேண்டும் என்றும் என்பிசிஐ அறிவுறுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com