

புதுடெல்லி,
முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ராம் விலாஸ் பஸ்வான், ஸ்மிரிதி இரானி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நேற்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர்.
மேலும், இமாசலபிரதேச கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட முக்கிய தலைவர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்தனர். தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.