இரண்டாம் உலகப்போரில் பலியான 2 அரியானா வீரர்கள் - உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இரண்டாம் உலகப்போரில் பலியான 2 அரியானா வீரர்களின் உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போரில் பலியான 2 அரியானா வீரர்கள் - உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

சண்டிகார்,

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலு ராம். ஜாஜ்ஜார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிசிங். இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, பிரிட்டிஷ் இந்திய ராணுவ சிப்பாய்களாக இருந்தனர். 1944-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின்போது, இத்தாலியில் ஜெர்மன் படைகளை எதிர்த்து போரிட்டு மரண மடைந்தனர். அப்போது அவர்களுக்கு வயது 19 தான்.

அவர்களின் உடல் பாகங்கள், கடந்த 1960-களில்தான் மீட்கப்பட்டன. மரபணு பரிசோதனையில், அவர்கள் ஐரோப்பியர்கள் அல்ல என்று தெரிய வந்தது. பின்னர், அவர்கள் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்ற விவரம் கண்டறியப்பட்டது. அதையடுத்து, இந்திய ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் உதவியுடன், இருவருடைய குடும்பத்தினரும் அடையாளம் காணப்பட்டனர்.

உடல் பாகங்கள், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டன. கிராம மக்கள் முன்னிலையில், இருவருடைய உடல் பாகங்களும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. உயிரிழந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு, உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com