இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற தாய் - உத்தரபிரதேசத்தில் அவலம்

உத்தரபிரதேசத்தில் இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற தாய் - உத்தரபிரதேசத்தில் அவலம்
Published on

மீரட்,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இறந்து கிடந்து உள்ளார். பல மணி நேரமாக அவரது உடல் அங்கேயே கிடந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ராஜூவின் தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜூ உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர். ஆனால் பல மணி நேரமாக கேட்டு பார்த்தும் உடலை எடுத்து செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. இதனால் ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் பல மணி நேரம் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் வாகனம் கிடைக்காததால் மனமுடைந்த தாய்-மகன் இருவரும் இறுதி சடங்கு செய்வதற்கும் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உதவிக்காக அருகே உள்ள போலீஸ் நிலையத்தை நாடினர். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அமித்குமார் மாலிக் நிதி உதவி செய்ததோடு மேலும் சிலரிடமும் நிதி திரட்டி இறந்த ராஜூ உடலை இறுதி சடங்கு செய்ய உதவினார். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே வாலிபர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து மீரட் மருத்துவக்கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com