கருப்பாக இருந்ததால் மருமகளை விரட்டி விட்ட மாமியார்.. அடுத்து நடந்த சம்பவம்

AI Image
கருப்பு நிறமாக இருப்பதால் தனது மருமகளை மாமியார் தனது வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நகரி,
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு பிரச்சினை தொடங்கியது.
கருப்பு நிறத்தில் உள்ள கோபிலட்சுமியை அவரது கணவர் வெறுத்து ஒதுக்கியதாக தெரிகிறது. மாமனார், மாமியாரும் துன்புறுத்தியதாக தெரிகிறது. திருமணத்தின்போது 25 பவுன் தங்கநகையும், ரூ.12 லட்சமும் கோபிலட்சுமியின் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கருப்பாக இருப்பதால் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கோபிலட்சுமியை வீட்டை விட்டு மாமியார் விரட்டி விட்டதாக தெரிகிறது.
இதை கண்டித்து கோபிலட்சுமி தனது கணவர் வீட்டின்முன்பு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே கணவரும் மாமனார், மாமியாரும் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதையடுத்து கோபிலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கணவர் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






