5 வயது மகனை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? - போலீஸ் விசாரணை

ஷில்பா தனது மகனுடன் வேறொரு அறையில் படுத்திருந்தார்.
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலக்காவு பகுதியை சேர்ந்தவர் மோகித் (வயது 34). இவர் திருச்சூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஷில்பா (30). இவர்களது மகன் அக்சயஜித் (5).
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மோகித்துக்கு காய்ச்சல் என்பதால், அவர் தனி அறையில் தூங்கினார். ஷில்பா தனது மகனுடன் வேறொரு அறையில் படுத்திருந்தார். மற்றொரு அறையில் மோகித்தின் தாய் தூங்கினார். காலை வெகு நேரமாகியும் ஷில்பாவும், அக்சயஜித்தும் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் மோகித் கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த போது, கட்டிலில் அக்சயஜித் அசைவற்று கிடந்ததையும், ஷில்பா தூக்கில் பிணமாக தொங்கி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஷில்பாவும் அக்சயஜித்தும் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் தாய், மகன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் மகனை கொன்று விட்டு ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால், அவர் என்ன காரணத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டார், மகனை எப்படி கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






