

வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித பதற்றமும் வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எந்தவித தட்டுப்பாடும் இல்லை. நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயல்பாக இயங்கி வருகின்றன' எனக் கூறினார்.
இந்த விவகாரத்தில் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறிய அவர், நுகர்வோரை எரிபொருள் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். வதந்திகளை நம்பி சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு பெட்ரோல், டீசல் வாங்குவதாகவும், அது தேவையில்லை என்றும் சுஜாதா சர்மா கூறினார். கியாஸ் சிலிண்டர் விநியோகத்தைப் பொறுத்தவரை, புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு வருவது தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், இருப்பினும் உள்நாட்டில் தட்டுப்பாடு எதுவும் பதிவாகவில்லை எனவும், சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல் தொடர்வதாகவும் தெரிவித்தார்.