

போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்த அணையில் நேற்று சொகுசு சுற்றுலா படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் சுற்றுலா பயணிகள் உள்பட மொத்தம் 31 பேர் பயணித்தனர்.
அணையின் மையப்பகுதியில் சென்றபோது திடீரென படகு அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அணைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 16 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, தண்ணீரில் மூழ்கி மாயமான எஞ்சிய 6 பேரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.