ம.பி.: 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்கள்; அரசு அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 4.3 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும்.
ம.பி.: 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்கள்; அரசு அறிவிப்பு
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்களை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும் என கூறினார்.

திறமையான மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். எங்களுடைய செயல்பாட்டை இது பிரதிபலிக்கிறது. நம்முடைய இளம் மாணவர்களை நாம் வாழ்த்துகிறோம். அவர்களுக்கு துணையாக இந்த அரசு இருக்கும். இளைஞர்கள் மற்றும் மத்திய பிரதேசம் என இருவரின் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைக்கான கதவுகளையும் இந்த அரசு திறக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் லேப்டாப்கள் வழங்கப்படும் என கூறினார்.

அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைய வாழ்த்துகிறேன் என்றும் கூறியுள்ளார். வருகிற 10-ந்தேதி மத்திய பிரதேசத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 4.3 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். இதன்படி மொத்தம் 5 லட்சம் மாணவர்கள், லேப்டாப்கள் மற்றும் சைக்கிள்களை பெறுவார்கள். இதேபோன்று ஒவ்வொரு அரசு பள்ளியில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com