

போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ஹபீப்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே கடந்த வருடம் அக்டோபர் 31ந்தேதி 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
ரெயில்வே பாதுகாப்பு படை வீரரின் மகளான அவர் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு படித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணும் மற்றும் அவரது உறவினரும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ஹபீப்கஞ்ச் காவல் நிலையம் மற்றும் எம்.பி. நகர் காவல் நிலையத்திற்கு இடையே அலைக்கழிக்கப்பட்டனர்.
இதற்கு எதிரான போராட்டத்தினை அடுத்து அரசு, துணை போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான அதிகாரியை பதவியில் இருந்து நீக்கியது. காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் 3 பேர் மற்றும் 2 துணை ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
துணை ஆய்வாளர்கள் பவானி பிரசாத் மற்றும் ராம்நாத் ஆகிய 2 பேருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று ஹபீப்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரா மற்றும் எம்.பி. நகர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சஞ்சய் சிங் ஆகியோரின் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டு உள்ளது.
ஹபீப்கஞ்ச் ரெயில்வே காவல் நிலைய பொறுப்பு அதிகாரி மொகித் சக்சேனாவின் சம்பளமும் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.