காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு எம்.பி. பதவி: மத்திய மந்திரி ஆவாரா?

காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி. ஆகிறார். அவர் மத்திய மந்திரி ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு எம்.பி. பதவி: மத்திய மந்திரி ஆவாரா?
Published on

புதுடெல்லி,

கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் மத்திய பிரதேச மாநிலத்தில், அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் எதிர்பார்த்தபடி, இளம்தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கவில்லை. மூத்த தலைவர் கமல்நாத் முதல்-மந்திரி ஆக்கப்பட்டார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் மறுக்கப்பட்டது.

இதனால் காங்கிரஸ் கட்சி தலைமை மீது அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். அதை மேலும் அதிகரிக்கிற வகையில், அவரது ஆதரவு மந்திரிகள் 6 பேர், முதல்-மந்திரி கமல்நாத்தால் ஓரங்கட்டப்பட்டனர்.

இந்தநிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேருடன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாயமானதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால், மறைந்த தனது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவின் 75-வது பிறந்த நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அதிரடியாக பாரதீய ஜனதா முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர் அமித்ஷாவுடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார்.

அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார். முன்னதாக அதை அவர் டுவிட்டரில் வெளியிட்டார்.

அந்த கடிதத்தில் அவர், எனது மக்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கவும், நிறைவேற்றவும் நான் புதிய பாதையில் பயணிப்பதுதான் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என கூறி இருந்தார். இது, அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேருவதை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் அவர் நேற்று மதியம், டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அவரது முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அவரை ஜே.பி.நட்டா வரவேற்று மலர்க்கொத்து வழங்கினார். மேலும், அவருக்கு பாரதீய ஜனதா கட்சி கொடி நிறத்திலான அங்கவஸ்திரத்தையும் அணிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒருவரது வாழ்வில் பல கட்டங்கள் உண்டு. எனது வாழ்வில் 2 நாட்கள் மிக முக்கியமானவை. ஒன்று, 2001-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி. அன்றுதான் நான் என் தந்தையை இழந்தேன். அடுத்து, 2020 மார்ச் மாதம் 10-ந் தேதி. (காங்கிரசில் இருந்து விலகிய நாள் மற்றும் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் சந்தித்து பேசிய நாள்)

நமது நோக்கம், எப்போதுமே மக்களுக்கு சேவை செய்வதாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

நானும், எனது தந்தையும் எப்போதுமே நாட்டுக்கு சேவைதான் செய்து வந்திருக்கிறோம். இப்போது காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பு இருந்தது போல இப்போது இல்லை. அதற்கு 3 காரணங்கள். அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வது இல்லை. அவர்கள் புதிய தலைமையை ஏற்க தயாராக இல்லை. அவர்கள் இளம் தலைவர்களை புறக்கணிக்கிறார்கள்.

பாரதீய ஜனதா குடும்பத்தில் சேருவதற்கு எனக்கு அழைப்பு விடுத்த கட்சி தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 26-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தலா ஒரு இடத்தில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா தனது வேட்பாளராக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை அறிவித்துள்ளது. எனவே அவர் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.

இதையடுத்து அவர் மத்திய மந்திரி ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு மத்திய மந்திரி சபையில் கேபினட் மந்திரி பதவி அளிக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com