

போபால்
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அரவிந்த் அகிர்வார் சிவகுமாரி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அரவிந்த் தினமும் வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வருவதால் இரவு நேரங்களில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தாமதமாக வந்த அரவிந்துக்கும் அவரது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அரவிந்தின் பெற்றோர் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து இருவரும் அமைதியாக உறங்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை வரை தூங்காமல் கடும் ஆத்திரத்தில் இருந்த சிவகுமாரி, நன்றாக தூங்கிக்கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.
அரவிந்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் அவரை மீட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரவிந்த் சாகரில் உள்ள பண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், சிவகுமாரி தனது வன்முறைச் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காரப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.