மதத்தைப் பற்றி ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வெளியிடுவதை எம்.பி.க்கள் தவிர்க்க வேண்டும் - மக்களவை சபாநாயகர்

மதத்தைப் பற்றி ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வெளியிடுவதை எம்.பி.க்கள் தவிர்க்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

புதுடெல்லி,

அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைத்து மதங்களும் சமம் என்று தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் எந்த மதத்தைப் பற்றியும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எப்பொழுதும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மக்களவை சபாநாயகராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனது பயணத்தை வெற்றிகரமாகச் செய்ய பங்களித்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த ஓம் பிர்லா கூறியதாவது:-

'அரசியலமைப்புச் சட்டத்தின்படியே பாராளுமன்றம் செயல்படுகிறது. அரசியலமைப்பின் முன் அனைத்து மதங்களும் சமம். எம்.பி.க்கள் எந்த மதத்தைப் பற்றியும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். எல்லா நேரங்களிலும் பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டும்.

17வது மக்களவையில் இதுவரை எட்டு அமர்வுகளின் கீழ் 1,000 மணி நேரம் சபை செயல்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது தேவையற்ற ஆக்கிரமிப்பு மற்றும் கூச்சலிடுவதை தவிர்க்க வேண்டும். விவாதங்கள், எதிர் விவாதங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை அலங்கரிக்கின்றன.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மேடையாக பாராளுமன்றத்தை எம்.பிக்கள் பயன்படுத்தக் கூடாது. புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்' என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com