

மும்பை,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. நாட்டில், 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மந்திரியின் இல்லத்தில் தங்கி உள்ளவர்களுக்கு மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில், மந்திரி திலீப்பின் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மராட்டியத்தில் மும்பை போலீசார் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்நகரில் மொத்தம் 9,657 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.