மராட்டிய முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்

மராட்டிய முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.
மராட்டிய முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

இதன் காரணமாக, கடந்த 12ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்காக கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா மகா விகாஷ் முன்னணி' என்ற கூட்டணியை அமைத்தது.

ஆனால், 23ந்தேதி எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரை தன் பக்கம் இழுத்து பாரதீய ஜனதா திடீர் அரசாங்கத்தை அமைத்தது. இதை எதிர்த்து சிவசேனா கூட்டணி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட அடுத்த சில மணி நேரத்தில், துணை முதல்-மந்திரி பதவி வகித்த தேசியவாத காங்கிரசின் அஜித்பவார், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர். இதன் மூலம் பாரதீய ஜனதா அரசாங்கத்தின் ஆயுள் 4 நாட்களில் முடிந்தது.

இதையடுத்து சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. மகா விகாஷ் அகாடி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டணி சார்பில், முதல்-மந்திரி பதவிக்கு சிவசேனா தலைவரான 59 வயது உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அவர்கள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அதனை ஏற்று கவர்னரும் ஆட்சி அமைக்க அழைத்தார்.

புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் சமாதி உள்ள மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற உடன் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து இட்டு விட்டு, கவர்னரிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டார். பின்னர் மேடையின் மையப்பகுதிக்கு வந்து கூட்டத்தினரை நோக்கி இருகைகளையும் கூப்பி தலைதாழ்த்தி வணங்கி விட்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.

இதைத் தொடர்ந்து 3 கட்சிகள் சார்பிலும் தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், காங்கிரசின் பாலசாகேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று முறைப்படி முதல் மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மற்ற உறுப்பினர்கள் பூங்கொத்து உள்ளிட்டவற்றை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதன்பின் தனது இருக்கைக்கு சென்ற அவர் வணக்கம் செலுத்தி விட்டு முதல் மந்திரி பொறுப்பினை ஏற்று கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com