

மும்பை,
மும்பையின் நரிமன் பாயிண்ட் பகுதியில், அரபிக்கடலை நோக்கி அமைந்துள்ள 23 மாடி 'ஏர் இந்தியா' கட்டிடம் கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது. மும்பையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கட்டிடம் டாடா குழுமம் 'ஏர் இந்தியா' நிறுவனத்தை வாங்கிய பிறகு. 'ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங்' நிறுவனத்தின் வசம் சென்றது.
இதற்கிடையே, மராட்டிய அரசின் தலைமை செயலகத்தில் அரசு அலுவலகங்களுக்கு கடும் இட நெருக்கடி ஏற்பட்டதால், இந்தக்கட்டிடத்தை வாங்க அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கான இறுதி ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை மாற்றும் பணிகள், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் மந்திராலயாவில் வைத்து சுமூகமாக முடிவடைந்தன. அதன்படி 'ஏர் இந்தியா' கட்டிடத்தை மராட்டிய அரசு ரூ.1,601 கோடி விலை கொடுத்து வாங்கி உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் துணை முதல்-மந்திரி சுனேத்ரா பவார், மந்திரிகள் மற்றும் 'ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.