முரசொலி அறக்கட்டளை வழக்கு: எல்.முருகன் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்பாக எல்.முருகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முரசொலி அறக்கட்டளை வழக்கு: எல்.முருகன் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

பஞ்சமி நிலம் குறித்து பேசிய விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை மந்திரி எல்.முருகன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது எல்.முருகன் சார்பில் மூத்த வக்கீல் கே.பரமேஷ்வர் ஆஜராகி, 'மனுதாரர் பட்டியலின ஆணையத்தின் துணை தலைவராக இருந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றது. அப்போது நடந்தவற்றை அரசியல்ரீதியான சொல்லாடலாகவும், கேள்வியாகவும் மட்டுமே அவரது பேச்சு அமைந்திருந்தது' என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரும் அரசியல்கட்சிகளில் முக்கிய நபர்களாக' உள்ளதை குறிப்பிட்டனர். முரசொலி அறக்கட்டளை டிரஸ்டி ஆர்.எஸ்.பாரதியின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா, 'இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை டிரஸ்டி ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் கேட்டு நாளை (அதாவது இன்று) தெரிவிப்பதாகவும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என்றும் கோரினார்.

இதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்காக விசாரிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com