மாயமான விவசாயி கொன்று புதைப்பு?

ஹாவேரியில் மாயமான விவசாயி கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாயமான விவசாயி கொன்று புதைப்பு?
Published on

ஹாவேரி

ஹாவேரி அருகே கோசனம்புரி கிராமத்தை சேர்ந்தவர் நீலப்பா(வயது 65). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார். இதுகுறித்து ஹாவேரி புறநகர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோசனம்புரி கிராமத்தை சேர்ந்த மால்தேஷ், நிங்கப்பா, குட்டப்பா ஆகியோர் மல்லப்பா என்பவரிடம் தாங்கள் தான் நீலப்பாவை கொன்று அவரது உடலை கிராமத்தில் ஓடும் வரதா ஆற்றங்கரையில் புதைத்தோம் என்று கூறியுள்ளனர்.

இதுபற்றி அறிந்த நீலப்பாவின் குடும்பத்தினர் மால்தேஷ், நிங்கப்பா, குட்டப்பா மீது ஹாவேரிபுறநகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தனர். ஆனாலும் புகாரை ஏற்க போலீசார் மறுத்து உள்ளனர். ஆனாலும் நீலப்பாவின் குடும்பத்தினர் அழுத்தம் காரணமாக நேற்று கிராமத்தில் ஓடும் வரதா ஆற்றுக்கு ஜே.சி.பி. எந்திரத்துடன் போலீசார் சென்றனர். ஆனால் ஆற்றில் அதிகம் தண்ணீர் செல்வதாக கூறி போலீசார் குழி தோண்டாமல் திரும்பி வந்து விட்டனர்.

நீலப்பாவை மால்தேஷ் உள்பட 3 பேரும் உண்மையிலேயே கொன்று புதைத்தனரா என்று தெரியவில்லை. நீலப்பாவை 3 பேரும் கொன்று புதைத்தது உண்மை என்றால் நீலப்பாவின் மகன் அனுமந்தாவின் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கும் என்று கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com