

புதுடெல்லி,
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஜார் கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் ஷோரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜார்கண்ட் மாநில மாணவர்கள் மாநில அளவிலான ஆட்சேர்ப்பு தேர்வுகளில் உள்ள முறைகேடுகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுகிறது. மேலும் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. உங்களால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் மூலம் ஜார்கண்ட் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதை நான் பாராட்டுகிறேன். மாணவர்கள் எழுப்பிய பல கோரிக்கைகளிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன்.இருப்பினும், போராட்டங்கள் தொடர்கின்றன. மேலும் சிலமாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, போராட்டம் நடத்தும் மாணவர்களின் பிரதிநிதிகளை நீங்கள் நேரில் சந்திக்க வேண்டும். அவர்களின் எஞ்சிய கவலைகளை தீர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்த உதவும்.எனவே, அவர்களின் குறைகளைகேட்டறிந்து, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.