

புதுடெல்லி,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மலையேற சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர் என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை. பலியானவர்களில் 6 பேர் பெண்கள். காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் மற்றும் 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குரங்கணி தீ விபத்து சம்பவம் மிகுந்த மன வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணை ஜனாதிபதி கூறும் போது, குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மலையேறச்சென்றவர்கள் தீ விபத்தில் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.