காதலை கண்டித்ததால் காதலன் உதவியுடன் சாமியார் பிறப்புறுப்பு துண்டிப்பு தாயார் புகார்

காதலை கைவிட கூறியதால் சாமியார் பிறப்புறுப்பை காதலன் உதவியுடன் மாணவி துண்டித்ததாக, அவரது தாயார் கேரள போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
காதலை கண்டித்ததால் காதலன் உதவியுடன் சாமியார் பிறப்புறுப்பு துண்டிப்பு தாயார் புகார்
Published on

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி என்ற கங்கேசானந்த தீர்த்தபாத சுவாமிகள் (வயது 54).

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக கங்கேசானந்த தீர்த்தபாத சாமியார் அவர்களது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அந்த பெண்ணின் மகளான சட்டக்கல்லூரி மாணவியை அந்த சாமியார் கற்பழித்து விட்டார். பல ஆண்டுகளாக இந்த கொடுமை நடந்ததால் அந்த மாணவி பொங்கி எழுந்து சாமியாரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி வீசினார். மாணவியின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட கங்கேசானந்த தீர்த்தபாத சாமியார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் தாய் கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். நாங்கள் விசாரித்ததில் அந்த வாலிபர் நல்லவர் இல்லை என்பது தெரிய வந்ததால் எனது மகளிடம் காதலை கைவிடும்படி கூறினேன்.

இதற்கிடையில் எனது கணவரின் நோயை குணப்படுத்துவதற்காக எங்களது வீட்டிற்கு வந்த கங்கேசானந்த தீர்த்தபாத சாமியாரும் எனது மகளுக்கு புத்திமதி கூறினார். இது அவர் மீது எனது மகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று இரவு நாங்கள் அனைவரும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டோம். சாமியாரும் பாலும், பழமும் சாப்பிட்டுவிட்டு தனியறையில் தூங்கச் சென்றார்.

நள்ளிரவில் சாமியாரின் அலறல் சத்தம் கேட்டு நாங்கள் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தோம். அப்போது எனது மகள் சாமியாரின் அறையில் இருந்து கையில் ரத்த கறை படித்த கத்தியுடன் ஆவேசமாக வெளியே வந்தார்.

அவரது காதலனின் உதவியுடன் அவர் சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ளார். சம்பவம் நடந்த பிறகு காதலன் தப்பியோடிவிட்டார். எனவே காதலை கண்டித்ததால் தான் எனது மகள் சாமியாரின் பிறப்புறப்பை அறுத்து உள்ளார். எனவே மகளின் காதலனை பிடித்து விசாரித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதேபோல ஸ்ரீஹரி என்ற கங்கேசானந்த தீர்த்தபாத சாமியாரின் தாயார் குட்டியம்மா என்பவரும் டி.ஜி.பி.யிடம் ஒரு புகார் செய்துள்ளார். அந்த புகாரில் எனது மகனை இதுபோல கொடுமைப்படுத்தியது தவறு. அவர் ஒழுக்கமான சாமியாராக வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த மாணவியின் காதலை கண்டித்ததால் தற்போது எனது மகன் மீது பொய் புகார் கொடுத்து உள்ளனர். எனவே இதுபற்றி முறையாக விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்த டி.ஜி.பி. சென்குமார் பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com