இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல்நல பிரச்சினை காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
Published on

நாகாலாந்து,

நாகாலாந்து மாநில கவர்னராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன், கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார்.

கடந்த 5-ந்தேதி கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. இதையடுத்து அவரது உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று (ஆகஸ்ட் 16) முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நாகாலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மாநில அரசுத் துறைகளால் எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்று நாகாலாந்து அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com