புதிய ரூபாய் நாணயங்களின் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

பார்வை மாற்று திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Image Courtesy : ANI 
Image Courtesy : ANI 
Published on

புதுடெல்லி,

டெல்லியின் விக்யான் பவனில் நடைபெற்ற நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் 'ஐகானிக் வாரம்' கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். இதில் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குறிப்பாக பார்வை மாற்று திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக புதிய நாணயங்களின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழா முத்திரையுடன் புதிய ரூ 1, ரூ 2, ரூ 5, ரூ 10 மற்றும் ரூ 20 நாணயங்களை பிரதமர் வெளியிட்டார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் "கடந்த 8 ஆண்டுகளில், இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய நடவடிக்கைகளை எடுத்து புதிய பணிகளைச் செய்ய முயற்சித்துள்ளது. அத்தகைய முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு, ஏழைகளுக்கு அதிகாரமளித்தது, வளர்ச்சியை துரிதப்படுத்தியது போன்றவை அதிகரித்துள்ளது.

"ஸ்வச் பாரத் அபியான்" ஏழைகளுக்கு கண்ணியமான வாழ்க்கை வாழ வாய்ப்பளித்ததுள்ளது. முந்தைய அரசை மையமாகக் கொண்ட ஆட்சியால் தேசம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நாட்டில் கொள்கைகள் மற்றும் முடிவுகள் அரசாங்கத்தை மையமாகக் கொண்டு இருந்தது. ஒரு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பலன்களைப் பெறுவதற்கு அரசாங்கத்தை அடைய வேண்டியது மக்களின் பொறுப்பாக இருந்தது.

அத்தகைய ஏற்பாட்டில், அரசு மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பு குறைந்து கொண்டே வந்தது. இன்று, 21ஆம் நூற்றாண்டில் இந்தியா மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியில் முன்னேறியுள்ளது. அவர்களுக்கு சேவை செய்ய எங்களை இங்கு அனுப்பியவர்கள் மக்கள். அதனால்தான் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாக கொண்டுள்ளோம்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com