

மும்பை,
காவல்துறையில் குற்ற செயல்கள் நடந்த இடத்தில் இருந்து குற்றவாளிகளின் இருப்பிடத்தை தேடி கண்டறிவதற்கும், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்களுக்கு நிபுணர்கள் மூலம் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அந்த வகையில் மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஸ்பைக் என்று அழைக்கப்படும் மோப்ப நாய், கடந்த 11 ஆண்டுகளாக வெடிகுண்டு நிபுணர் குழுவில் இடம்பெற்று சேவை புரிந்து வந்தது. இதையடுத்து கடந்த 24 ஆம் தேதியன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற இந்த மோப்ப நாய்க்கு காவல்துறையினர் வழியனுப்பு விழா நடத்தி சிறப்பித்துள்ளனர்.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட போலீஸ் வாகனத்தில் நாயை அமரவைத்து அதனை மாலை மரியாதையுடன் உற்சாகமாக காவல்துறையினர் வழியனுப்பி வைத்தனர். நாசிக் காவல்துறையினரின் இந்த செயல் மராட்டிய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.