இன்று தேசிய ராணுவ தினம்: பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து

ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று தேசிய ராணுவ தினம்: பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ராணுவத்தின் வீரம் மிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாழ்த்துக்கள். இந்த சமயத்தில், நாட்டுக்கான சேவையில் மிக உயர்ந்த தியாகத்தை செய்த துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்வோம். தைரியமான மற்றும் உறுதியான வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் என கூறி உள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது ராணுவம் வலிமையானது, தைரியமானது மற்றும் உறுதியானது. நமது ராணுவம் எப்போதும் நாட்டை பெருமைப்படுத்துகிறது. நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com