75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - செப்டம்பர் 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார்

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.
75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - செப்டம்பர் 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார்
Published on

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி 'ஆசிரியர் தின விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் நடப்பாண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது உயர்கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வரும் செப்டம்பர் 5-ந்தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com