அக்டோபர் 1-ந் தேதி நாடு முழுவதும் பொது இடங்களில் தூய்மைப்பணி - மத்திய அரசு அழைப்பு

நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி பொது இடங்களில் தூய்மைப்பணிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதிவரை 'சுகாதார சேவை' என்ற பெயரில், பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த பிரசாரம் நடக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பங்கேற்குமாறும் பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் அழைப்பு விடுத்தார்.

பொது இடங்கள்

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப்பணி நடைபெறும்.

நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரெயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம்

ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமான போக்குவரத்து, ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவை இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com