

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் கடைசிக்காலத்தில் பாகிஸ்தானில் கர்தார்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தர்பார் சாகிப் குருத்வாரா, சீக்கியர்களின் புனித தலம் ஆகும். கடந்த 18-ந் தேதி திறக்கப்பட்டுள்ள கர்தார்பூர் சாலை வழியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தர்பார் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற வேண்டும். நாம் எல்லைகளை திறக்க வேண்டும் என கூறினார். பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் மேற்கொண்ட முயற்சியால்தான் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்டதாக கூறிய சித்து, இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சித்து மூத்த சகோதரர் என கூறியதை பா.ஜ.க. விமர்சித்து இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள் என சொல்லட்டும் என சித்து குறிப்பிட்டார்.