

புதுடெல்லி,
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மியான்மர் புறப்பட்டார். இரு நாடுகளின் கடற்படைகள் இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் கடற்படைத் தளபதி திரிபாதி இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-மியான்மர் இடையிலான நீண்டகால நட்புறவானது பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும், கடற்படை தளபதி திரிபாதியின் பயணம் இதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது கடற்படை தளபதி திரிபாதி, மியான்மர் ஆயுதப் படைகளின் தளபதி, பாதுகாப்பு மந்திரி, கடற்படை தளபதி மற்றும் பிற மூத்த ராணுவ அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், இந்த பேச்சுவார்த்தைகள் இந்தியா-மியான்மர் இடையிலான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை ஆய்வு செய்யவும், இணைப்புகளை மேம்படுத்தவும், கடற்படை ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராயவும் வழிவகை செய்யும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.