

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதில் அளித்துப்பேசினார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் (காங்கிரஸ்) பேசினார்.
அப்போது அவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர், கொரோனாவால் இறந்தோர் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்பட்டது. இடம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியது என எதிலுமே தரவுகள் இல்லாத மத்திய அரசு. NDA (என்.டி.ஏ) அரசு என்றால் 'No Data Available' (தரவுகள் இல்லா) அரசு என்று சாடினார்.
தொடர்ந்து பேசுகையில் அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-
* 142 பெரும் கோடீசுவரர்களுக்காக, இந்த நாட்டின் நலன் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி மத்திய அரசில் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதில் 8 லட்சத்தை விட்டுவிட்டு 78 ஆயிரத்து 264 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* நிதி மந்திரியின் பட்ஜெட் உரையில் ரசித்தது, அது மிகவும் குறுகிய 90 நிமிட உரை என்பதைத்தான்.
* சி.எம்.ஐ. தரவுகள் நகர்ப்புற வேலையில்லாதிண்டாட்டம் 7.9 சதவீதம், கிராமப்புற வேலையில்லா திண்டாட்டம் 6.54 சதவீதம் என கூறுகின்றன. பட்ஜெட்டில் 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது.
* பழைய கட்டமைப்புகளை விற்று ரூ.6 லட்சம் கோடி திரட்டப்போவதாக மத்திய அரசு கூறி ஓராண்டாகியும் பட்ஜெட்டில் அதுபற்றி எதுவும் இல்லை.
* 109 தடங்களில் 151 பயணிகள் ரெயில்களை தனியார்துறைக்கு வழங்குவதாக அறிவித்தனர். ஒருவர் கூட ஏலம் கேட்க முன்வரவில்லை.