பிரம்மாவர் அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

பிரம்மாவர் அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரம்மாவர் அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
Published on

மங்களூரு;

தொடர் அட்டகாசம்

உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா மடப்பாடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையல் கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.

அந்த சிறுத்தை, கிராமத்தில் உள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள், வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிறுத்தை பிடிபட்டது

இதையடுத்து வனத்துறையினர் அந்த கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். மேலும் அதனுள் இரையாக நாய் ஒன்றையும் கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி அந்த சிறுத்தை வந்தது. அப்போது கூண்டில் இருந்த நாயை வேட்டையாட அந்த சிறுத்தை முயன்றது. அப்போது அந்த சிறுத்தை கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் சிறுத்தை சிக்கியது பற்றி அறிந்ததும், சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

6 வயது பெண் சிறுத்தை

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 6 வயது நிரம்பிய பெண் யானை ஆகும். இந்த சிறுத்தை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com