

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட் உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள், நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இங்கு வந்து தங்கி பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால், தேர்வு அழுத்தம் காரணமாக பல மாணவ, மாணவியர் தற்கொலை எனும் தவறான முடிவை எடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, மத்தியபிரதேச மாநிலம் சட்டர்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜுகி பட்டேல் (வயது 18). இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பெசண்ட் விஹார் பகுதியில் தங்கி அங்குள்ள நீட் பயிற்சி மையத்தில் இளநிலை நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், மாணவி ஜுகி பட்டேல் நேற்று இரவு விடுதியில் வைத்து விஷம் குடித்துள்ளார். இது குறித்து அறிந்த சம மாணவிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் ஜுகி பட்டேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.