

பாட்னா,
பீகாரின் பாட்னா நகரில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பீகாரில் உரிய நியாயம் கிடைக்காத நிலையில், மாணவியின் பெற்றோர், உறவினர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தருக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி மாணவியின் தாயார் கூறும்போது, பீகாரில் எங்களுக்கு நியாயம் கிடைத்திருந்தால், நாங்கள் ஏன் டெல்லிக்கு வர போகிறோம்? என கேட்ட அவர், மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.
பீகார் போலீசார் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறிய அவர், வழக்கை மூடி மறைக்கவே அவர்கள் முயல்கின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
அந்த மாணவி விடுதி அறையில் சுயநினைவிழந்த நிலையில் கிடந்துள்ளார். சக மாணவிகள் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் மீட்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார். அறையில் சில தூக்க மாத்திரைகள் கிடந்துள்ளன.
இதனால் முதலில், அதனை தற்கொலை என போலீசார் கூறினர். ஆனால், பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான தடயங்கள், கிடைத்தன. தடய அறிவியல் ஆய்வு முடிவும் கூட, அவர் மரணத்திற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்பதற்கான சான்றுகளை உறுதி செய்தது.
இதனால், பலாத்கார குற்றச்சாட்டு வலுவடைந்தது. இதனை தொடர்ந்து எழுந்த நெருக்கடியால், வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்கும்படி பீகார் அரசு பரிந்துரைத்தது.