

புதுடெல்லி,
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோன பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட், ஜேஇ இ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக் மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது. மேலும் கொரோனா பரவல் நேரத்தில் இத்தகைய தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். மாணவர்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.