

புதுடெல்லி,
பெரு வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நேபாளத்துக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பியும், மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசு ஏற்கனவே நேபாளத்துக்கு 4 விமானங்களில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து இருந்தன. கடந்த 2-ந் தேதி 10 டன் நிவாரண பொருட்கள், 27-ந் தேதி 37.5 டன் நிவாரண பொருட்கள், 28-ந் தேதி 10 டன், 29-ந்தேதி 11 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. மீட்பு குழுவினரும் சென்று இருந்தனர்.
இந்த நிலையில் நிவாரண பொருட்களுடன் 5-வது இந்திய விமானம் இன்று நேபாளம் சென்றது. 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்பு குழுவினர் இந்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் தள பதிவில் இதை தெரிவித்துள்ளார்.