

புதுடெல்லி,
பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே மத்திய அமைச்சர்களாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு எதிரான விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்து விட்டனர். மேனகா காந்தி மட்டும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஸ்மிரிதி இரானி கூறினார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மற்றொரு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார்.
இந்த நிலையில் எம்.ஜே.அக்பர் விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார்.
சிஎன்என் மஜ்லி டி புய் காம்ப் 2007 ஆம் ஆண்டில் 18 வயது நிரம்பியவராக இருந்த போது அவர் அக்பரால் பாலியல் துன்புறுத்தப்பட்டார் என்று தெரிய வந்துள்ளது.
ஹபிங்டன் போஸ்ட்டின் அறிக்கையின்படி அக்பரின் கீழ் ஆசிய ஏஜ் செய்தித்தாளில் காம்ப் அப்போது பணி புரிந்து வந்தார்.
டுவிட்டரில் இந்த சம்பவம் குறித்து காம்ப் கூறி இருப்பதாவது.
"நான் நன்றியுணர்வை காட்ட என் கையை நீட்டினேன். 55 வயதான அவரது நாக்கை 18 வயதான எனது தொண்டைக்குள் செலுத்தினார் என கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறி உள்ளதாவது:
பேப்பரில் அடுத்த நாள் காலை முன் பக்கத்திற்கு புகைப்படம் போட அக்பர் விருப்பத்தை கேட்பதும் எனது பணியில் ஒன்று. நான் அவரிடம் புகைப்படங்களை கொடுப்பேன். அவர் அவைகளை பார்த்து எதையும் சொல்ல மாட்டார். அந்த சமயம் அவர் கொடுக்கும் படங்கள் அனைத்தும் அறுவெறுப்பாக இருக்கும் என கூறி உள்ளார்.