

புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இடஒதுக்கீடு நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தெக்சீன் பூனவல்லா என்பவர் இந்த இடஒதுக்கீடு நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 10 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை விதிக்க மீண்டும் மறுத்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கு, ஏற்கனவே இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என அவர்கள் அறிவித்தனர்.