

புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு கடந்த ஆகஸ்ட் 5ந்தேதி ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்து உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டு உள்ளன. அவற்றின் தலைநகரங்களான ஸ்ரீநகர் மற்றும் லேவில் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு லெப்டினன்ட்-கவர்னர்கள் முறைப்படி பொறுப்பேற்று கொண்டனர்.
இந்த நிலையில், நாட்டின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின், நாட்டில் 565 மாநிலங்களாக பிரிந்து கிடந்த பகுதிகளை ஒன்றிணைப்பதில் பெரும் பங்காற்றிய பட்டேலின் பணியை நினைவு கூர்ந்து பேசினார்.
தொடர்ந்து ஜவடேகர், சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370ஐ ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் ஆகியவை இன்றிலிருந்து யூனியன் பிரதேசங்களாகின்றன என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அவற்றின் புதிய அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது என கூறினார்.