

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பருவ காலநிலை அவ்வபோது மாறி வருகிறது என்றும், ஒவ்வொரு நாடும் இதனை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த பூவுலகை அடுத்த தலைமுறையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும் புவி வெப்பமயமாதல் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு மிக நீண்ட கடற்கரை பகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், 2050 ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 2 கோடி மக்கள் இடம்பெயரக்கூடும் என்று அவர் கூறினார்.
கடல் நீர்மட்டம் உயர்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடலோர பகுதிகளில் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.