

புதுடெல்லி,
இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரசின் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் அந்நாட்டில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் பல்வேறு நாடுகளும் இங்கிலாந்துடனான விமான சேவையை ரத்து செய்தன.
இதேபோன்று, இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து கடந்த டிசம்பர் 23ந்தேதி நிறுத்தப்பட்டது.
2வது வகை புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் 82 ஆக அதிகரித்த நிலையில், கடந்த புதன்கிழமை இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கான விமான சேவை தொடங்கியது.
அரசு அறிவித்ததன்படி, ஒவ்வொரு வாரமும் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தலா 15 விமானங்கள் என மொத்தம் 30 விமானங்கள் இயக்கப்படும்.
இந்த நடைமுறை வருகிற 23ந்தேதி வரை நீடிக்கும் என மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் பூரி கூறியுள்ளார்.
எனினும், கடந்த வியாழ கிழமை தொற்று அச்சத்தினால், விமான சேவை தடையை வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கும்படி டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் விடுத்த வேண்டுகோளுக்கு அரசு இணங்கவில்லை.
இந்த சூழலில் இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியா வருவதற்கான விமான சேவை இன்று தொடங்கியது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், 246 பயணிகளை சுமந்து கொண்டு ஏர் இந்தியா விமானம் ஒன்று இந்தியா வந்தடைந்து உள்ளது.