

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்களை நியமனம் செய்வதற்கு மத்திய அரசின் சட்ட அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தமட்டில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்களின் குரூப்-ஏ பட்டியலில் இடம்பெற 5 ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும். குரூப்-பி பட்டியலுக்கு 4 ஆண்டுகளும், குரூப்-சி பட்டியலுக்கு 3 ஆண்டுகளும் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நியமிக்கப்படும் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் பதவியை பொறுத்தமட்டில் 10 ஆண்டு அனுபவமும், மத்திய அரசின் மூத்த வக்கீலாக பணியாற்ற 5 ஆண்டுகளும், மத்திய அரசு வக்கீலாக பணியாற்ற 4 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட கோர்ட்டு மற்றும் சார்பு நீதிமன்றங் களில் மத்திய அரசு வக்கீலாக நியமிக்கப்படுபவர்களுக்கு 5 ஆண்டுகளும், கூடுதல் மத்திய அரசு வக்கீலாக நியமிக்கப்படுப வர்களுக்கு 3 ஆண்டுகளும் வக்கீலாக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஒதுக்கப்படும் வழக்குகளை அரசின் முன் அனுமதியின்றி மற்றவர்களுக்கு மாற்றக்கூடாது.
ஆவணங்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டும். வழக்கு ஒதுக்கீடு என்பது சட்ட அமைச்சகத்தின் முடிவுக்கு உட்பட்டது. பதவியில் இருந்து விலக விரும்பினால் ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும். அரசின் அறிவுறுத்தல்களை மீறினால் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.