

புதுடெல்லி,
மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அவ்வப்போது, வரி தொடர்பாக புதிய முடிவுகளை எடுப்பதற்காக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது.
இந்த கவுன்சிலின் 30-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், கூடுதல் நிதி திரட்டுவதற்காக, சில பொருட்கள் மற்றும் சேவைகள் மீது அதிக வரி விதிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை பற்றி, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இதுபற்றி பரிசீலிக்க 7 மந்திரிகள் அடங்கிய குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதில், பேரிடர்களை அதிகமாக சந்திக்கும் வடகிழக்கு, மலைப்பகுதி மற்றும் கடலோர மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள். இந்த குழு, 5 அம்சங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும்.
அதாவது, புதிய வரியை மாநில அளவில் விதித்தால் போதுமா? அல்லது அகில இந்திய வரியாக விதிக்கலாமா? என்று ஆலோசனை நடத்தும். ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்கள் மீது மட்டும் புதிய வரி விதிக்கலாமா? என்று விவாதிக்கும் என அருண் ஜெட்லி கூறினார்.