

புனே,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலாக உள்ள சூழலில் மராட்டியம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் தொற்றை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா தொற்றின் 2வது அலை சுனாமியை போன்று தாக்க கூடும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனை தொடர்ந்து, தனது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து உள்ளது.
இதன்படி, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மராட்டியத்திற்குள் நுழைவதற்கு முன் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை செய்திருக்க வேண்டும். அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு கொண்ட அறிக்கையையும் தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதேபோன்று மும்பை கார்ப்பரேசன் ஆனது மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதில், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பயணிகளுக்காக விதிக்கப்பட்ட சமீபத்திய வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி தெரிவித்து உள்ளது.