

புதுடெல்லி,
டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பணிகள் மற்றும் சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த கட்டுமான பணிகளின் விவரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகர் கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது;-
மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டுவது, புதிய விஸ்டா பகுதி மறுகட்டமைப்பு ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தற்போது வரை ரூ.238 கோடியும், மத்திய விஸ்டா பகுதியை மறுகட்டமைக்க தற்போது வரை ரூ. 63 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ரூ.971 கோடி வரை ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய விஸ்டா பகுதியின் மறுகட்டமைப்பிற்கு ரூ.608 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் வருகிற நவம்பர் 2021 ஆம் ஆண்டு முடிவடையும் எனவும் எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு திட்டங்களுக்கும் 2021-22 நிதியாண்டின்படி ரூ.1,289 கோடி செலவாகும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.